யாசகம் பெறுவதில் மோதல்:கல்லால் தாக்க முயன்ற யாசகர்
குமரியில் யாசகம் பெறுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக கல்லால் தாக்க முயன்ற யாசகரால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரின் மையப்பகுதியில் செட்டிகுளம் சந்திப்பு அமைந்துள்ளது. செட்டிகுளம் சந்திப்பில் இருந்து வேப்பமூடு செல்லும் PWD சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை அருகே உள்ள நடைபாதையில் யாசகம் பெறுவோர் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபாதையில் யாசகர்கள் இருவர் ஒருவரை ஒருவரை கல்லால் தாக்கி கொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினந்தோறும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், உதவியாக கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொண்டு, அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தி விட்டு நடைபாதையில் இருந்தவாறே தகாத வார்த்தைகளால் பேசுவதும், உடம்பில் அரைகுறை ஆடையுடன் நடைபாதையில் சுற்றித் திரிவதும் அவ்வபோது பாதசாரிகளை முகம் சுழிக்க வைக்கிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக கண்காணித்து யாசகம் பெறுவோரை மீட்டு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.