உறவுகளை இழந்த 100 குழந்தைகள்: தத்தெடுத்து கல்வி செலவை ஏற்ற இளைஞர்கள்
குமரியில், உறவுகளை இழந்த 100 சிறுவர் சிறுமிகளை தத்தெடுத்து, அவர்களின் முழு கல்வி செலவையும் ஏற்ற இளைஞர்களுக்கு பாராட்டு குவிகிறது.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம், தக்கலை, திருவட்டார் சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வேலை செய்யும் இளைஞர்கள் ஒன்றிணைந்து, கடந்த கொரோனா முதல் அலையின் போது, வருமானம் இன்றி பரிதவித்து கொண்டிருந்த பொது மக்களுக்கு உணவு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்தனர்.
அடுத்தகட்ட நடவடிக்கையாக, கடந்த மே மாதத்தில் கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போதும், பல உதவிகளை செய்த அந்த இளைஞர்கள், தற்போது ஒருபடி மேலே போய், தாய் அல்லது தந்தையை இழந்த சிறுவர், சிறுமிகளை தத்தெடுத்து முழு கல்வி தொகையையும் வழங்க முன்வந்து உள்ளனர்.
அதன்படி, முதல்கட்டமாக, 100 பேரை தேர்வு செய்து, அவர்களின் கல்விச் செலவை இந்த இளைஞர்கள் மேற்கொள்ள முன்வந்துள்ளனர். முதலாவதாக, தலா ஆயிரம் ரூபாய் வீதம் காசோலையாக வழங்கியதோடு, அவர்களின் இறுதி படிப்பு வரைக்குமான செலவை தாங்களே ஏற்று கொள்வதாகவும் உறுதி அளித்து, ஒப்பந்த பத்திரத்தையும் வழங்கினர். இளைஞர்களின் இச்செயலை, பலரும் பாராட்டி வருகின்றனர்.