சசிகலாவுக்கு பயந்து ஜெயலலிதா நினைவிடம் மூடல்- உதயநிதி
சசிகலா வருகைக்கு பயந்து ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டுள்ளது என காஞ்சிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை உதயநிதி ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கினார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது, ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள உண்மையை வெளிகொண்டு வந்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். அதிமுக அமைச்சர்கள் அத்தனை பேர் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதை மக்கள் அனைவரும் அறிவார்கள்.
அதிமுக அரசு, மாநிலத்திற்கான கல்வி உரிமைகளை பறி கொடுத்து வருகிறது. இதுவரை நீட் தேர்வால் 14 மாணவர்களை நாம் இழந்துளோம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வார். சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று விடுவார், மீண்டும் சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்திலேயே திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு மண்டபம் மூடப்பட்டுள்ளது என்றார்.