ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க தடை
ஈரோட்டில் நாளை, நாளை மறுநாள் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தடை விதித்துள்ளார்.
HIGHLIGHTS
ஈரோட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் வருகையையொட்டி, ஈரோடு மாவட்ட காவல் எல்லையில் நாளை (30ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (31ம் தேதி) ஆகிய நாட்களில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விட தடை விதித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (30ம் தேதி) சனிக்கிழமையன்று ஈரோடு மாவட்டம் வருகை புரிந்து நாளை மறுநாள் (31ம் தேதி) ஞாயிற்றுக்கிழமையன்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி காவல் நிலைய சரகம் சின்னியம்பாளையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
தமிழக முதல்வரின் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக, ஈரோடு மாவட்ட காவல் எல்லையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் எவ்வித ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.