வெள்ளோடு அருகே ரூ.2.67 லட்சம் நகைகள் கொள்ளை
வெள்ளோடு அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அடுத்த முகாசி அனுமன்பள்ளி, இந்திரா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. விவசாயியான இவருக்கு மனைவி சரோஜா, 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஈரோட்டில் வசித்து வருகின்றனர். பொன்னுசாமியும், சரோஜாவும் தனியாக வசித்து வந்தனர்.
பொன்னுசாமியும், அவரது மனைவி சரோஜாவும் தங்களது உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் பகல் 2 மணி அளவில் காரில் சென்று விட்டு மாலை 4 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் வெளிப்புற கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, படுக்கையறையில் இருந்த பீரோக்களை சாவி மூலம் திறந்து அதிலிருந்த ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 4 ஜோடி தங்க கம்மல், ரூ. 22 ஆயிரம் மதிப்பிலான தங்க காசு மற்றும் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்த திருட்டில் பணம் மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சத்து 67 ஆயிரம் ஆகும். இது குறித்து பொன்னுசாமி வெள்ளோடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.