கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாக எஸ்.பியிடம் குழந்தைகளுடன் பெண் மனு
தர்மபுரி அருகே, கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாகக்கூறி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எஸ்.பி யிடம் மனு அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
இது தொடர்பாக, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி.பள்ளிப்பட்டி லூர்துபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.ஷியபா என்பவர் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
நானும், எனது கணவர் ராஜ்குமார் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். கடந்த 2019 ம் ஆண்டில், நானும் எனது கணவரும் பைனாான்ஸ் உரிமையாளர் ஜெ.பி.நாதன் மற்றும் அவரது மனைவி எலிசபெத்ராணி, மகள் ராணி, அஞ்சலி ஆகியோரிடம் ரூ 4.5 லட்சம் கடன் வாங்கினோம். 15 நாட்களுக்கு வட்டி மட்டும் கட்டச் சொல்லி பணத்தை வசூல் செய்தனர்.
இதுவரை, அசல், வட்டி என ரூ 25 லட்சம் வசூல் செய்துள்ளனர். மேலும் ரூ40 லட்சம் கட்ட வேண்டும் எனக்கூறி மிரட்டி வருகின்றனர். கந்து வட்டி தொழில் செய்து வரும் மேரிஸ்டெல்லா என்பவரிடம் ரூ4.5 லட்சம் கடன் வாங்கி ரூ 10 லட்சம் அசல், வட்டி கட்டியுள்ளேன். மீண்டும் ரூ 7 லட்சம் தரவேண்டும் என மிரட்டுகின்றனர். இவர்களின் மிரட்டலுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்துள்ளேன்.
மேற்கண்ட நபர்கள் எங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியும், தகாத வார்த்தைகளால் எங்களை அசிங்கப்படுத்துகின்றனர். எனவே மேற்கண்ட நபர்களிடம் இருந்து எங்களை மீட்க வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.