வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த கலெக்டர்
வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மாவட்ட கலெக்டர் ச.திவ்யதர்சினி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் வருகின்ற 19ம் தேதி சனிக்கிழமை அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்களை செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் ஒளிபரப்ப மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ச.திவ்யதர்சினி, வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தின் மூலம், நேற்று (07.02.2022) முதல் 18.02.2022 வரை தர்மபுரி நகராட்சி மற்றும் காரிமங்கலம் பேரூராட்சி, பி.மல்லாபுரம் பேரூராட்சி, மாரண்டஅள்ளி பேரூராட்சி, கம்பைநல்லூர் பேரூராட்சி, பென்னாகரம் பேரூராட்சி, கடத்தூர் பேரூராட்சி, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி, பாலக்கோடு பேரூராட்சி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி, அரூர் பேரூராட்சி ஆகிய 10 பேரூராட்சிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்வு செய்து, நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்படுகிறது.
எனவே, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வாக்காளிப்பதன் அவசியம் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தயாரித்து வழங்கியுள்ள வாக்காளர் விழிப்புணர்வு வீடியோ படக்காட்சிகளை பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், தர்மபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) மாரிமுத்துராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (உள்ளாட்சி தேர்தல்) இரவிசந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.அண்ணாதுரை உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.