மகளை பாலியல் கொடுமை செய்து தந்தைக்கு ஆயுள் தண்டனை!
மகளை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு திருவண்ணாமலை கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
HIGHLIGHTS
மகளை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு திருவண்ணாமலை கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்துவிட்டார்.
இந்நிலையில், தொழிலாளி வீட்டில் தனியாக இருக்கும்போது, அவரது 16 வயது மகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், நடந்ததை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து இதுபோன்ற அத்துமீறலும், வன்கொடுமையும் நடப்பதால் அதிர்ச்சியடைந்த சிறுமி, தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதைத்தொடர்ந்து, உறவினர்கள் அந்த சிறுமியை காப்பாற்றியுள்ளனர். அப்போது, தந்தையே தன்னிடம் தவறாக நடக்க முயற்சிப்பது குறித்து கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, கடந்த 4.5.2022 அன்று ஆரணி மகளிர் போலீசில் சிறுமி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலி தொழிலாளியை கைது செய்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.
அதில் மகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றத்துக்காக செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், சிறுமியை கொலை செய்வதாக அச்சுறுத்திய குற்றத்துக்காக கூடுதலாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ10 ஆயிரம் அபராதமும், அதை செலுத்த தவறினால் கூடுதலாக 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார்.
அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த செந்தில்குமாரை, போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.