திருவண்ணாமலை: கையில் மெஹந்தி வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பணியாளர்கள்
வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையில் மெஹந்தி வரைந்து திருவண்ணாமலை குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
HIGHLIGHTS
மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகத்தின் கடமையான வாக்களிக்கும் உரிமையை அறிவுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், வேளாண்மை துறை மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பொதுமக்கள் தேர்தல் நாளன்று தவறாமல் வாக்களிக்க வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கியும், விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும், வாக்காளர் வாக்காளர் உறுதிமொழி ஏற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை தொகுதியில் மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் கைகளில் மெஹந்தி வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் ரிஷப், சமூக நலத்துறை அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் பணியாளர்கள் ,அங்கன்வாடி பணியாளர்கள் ,ஊரக வளர்ச்சித் துறை வருவாய்த்துறை பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கைகளில் மெஹந்தி வரைந்து 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.