திருவண்ணாமலையில் மூதாட்டி வீட்டில் 50 பவுன் நகைகள் திருட்டு
திருவண்ணாமலை அருகே மூதாட்டியின் வீட்டில் பூட்டை உடைத்து, 50 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து, 50 பவுன் நகையை திருடி சென்ற மா்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை தாலுகா பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மனைவி பூங்காவனம் வயது 64, இவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். 2 மகன்களும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மற்ற 3 மகள்களும் தாயுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பூங்காவனம் மற்றும் அவரது மகள்கள் 3 பேரும் வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி காணப்பட்டது.
அத்துடன் வீட்டில் இருந்த 50 பவுன் நகை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் திருவண்ணாமலை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்
ஆரணியில் பட்டப்பகலில் பைக்கில் வைத்து இருந்த ரூ.99 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி காந்தி ரோடு அருகே உள்ள சந்திரகுள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ். நகராட்சியில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார்.
இவரும் இவரது அக்கா அமுதா இருவரும் நேற்று பகலில் தச்சூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.99 ஆயிரம் எடுத்தனர். பின்னர் அதனை தனது இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு ஓட்டி சென்றனர். வழியில் ஒரு டீக்கடையில் இருவரும் டீ சாப்பிட இருசக்கர வாகனத்தை வெளியில் விட்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து வெளியே வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனம் சற்று தொலைவில் இருந்தது. மேலும் சீட்டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த ரூ.99 ஆயிரம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர்கள் உடனடியாக ஆரணி டவுன் போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும் பணம் திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.