மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 16 வயது இளம்பெண் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரை திருவண்ணாமலை அம்பேத்கர் தெருவை சேர்ந்த முத்துக்குமார் ( 21) என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் அவரிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார்.
இதனால் முத்துக்குமார் ஆத்திரமடைந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த மாணவி மற்றும் அவரது தாய் மற்றும் உறவினர் ஒருவர் ஆகியோர் அம்பேத்கர் தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் சேர்ந்து அவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் மாணவியின் உறவினரை அவர்கள் அசிங்கமாக பேசி தாக்கினர். இதையடுத்து அந்த மாணவியை, முத்துக்குமார் கீழே தள்ளி தாக்கி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை தடுக்க வந்த மாணவியின் தாயாரையும் அவர்கள் ஆபாசமாக பேசினர். மேலும், அவரிடம் உனது மகளின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து மாணவியின் தாயார் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார், முத்துக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.மேலும், இதில் தொடர்புடைய அவரது நண்பரை தேடி வருகின்றனர்.