நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது
HIGHLIGHTS
திருவண்ணாமலை நகராட்சி மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் டி.வி.எம்.நேரு தலைமை வகித்தாா். மருத்துவா் சவீதா கதிரவன் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி வரவேற்றாா்.
மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவரும், அருணை மருத்துவக் கல்லூரி இயக்குநருமான எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு சிலம்ப கழிகளை வழங்கி, சிலம்பம் பயிற்சியைத் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது
சிலம்பம் என்று சொன்னால் சப்தம் அல்லது ஒலி என்று பொருள். அகத்தியர் எழுதிய நூலில் கூட சிலம்பு கலையைப் பற்றி சொல்லியுள்ளார். சிலம்பம் தமிழர்களுடைய வீர விளையாட்டுகளில் ஒன்று. புலியை முறத்தால் தாய் ஒருத்தி துறத்தியதாக புறநானூறு கூறுகிறது.
பெண்களுக்கு முறமே ஒரு ஆயுதம் என்றால் சிலம்பத்தை அவர்கள் முறைப்படி கற்றால் இன்னும் வீரத்தில் சிறந்து விளங்கலாம் . சிலம்பம் ஒரு கலை மட்டுமல்ல அது உடலையும் மனத்தையும் ஒரு நிலைப்படும், பாரம்பரியமிக்க தமிழ் கலையை மீண்டும் புதுப்பிக்கும் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன் என அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகா்மன்றத் தலைவா் நிா்மலா, வெற்றித் தமிழா் பேரவைத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன், நகா்மன்ற துணைத் தலைவா் சு.ராஜாங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.