6 அம்ச கோரிக்கை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் குடும்பத்தினருடன் ஊர்வலம்
திருவண்ணாமலையில் சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்தினருடன் ஊர்வலம் சென்றனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் குடும்பத்தினருடன் ஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு தலைவர் சு.பார்த்திபன் வரவேற்றார். பொதுச் செயலாளர் அம்சராஜ் தீர்மான விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.கண்ணன் தொடக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. க.மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள சாலை பணியாளர் காலிபணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
சாலை பணியாளர்களின் பணிநீக்கத்தின்போதும் பணிக்காலத்திலும் உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் மாநில, கோட்ட, மாவட்ட, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.