கூட்டுறவு சங்க கடன்: விடிவெள்ளி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை மனு
கூட்டுறவு கடனை ரொக்கமாக கட்ட வேண்டும் என கூட்டுறவு சங்கங்கள் வற்புறுத்துவதாக விடிவெள்ளி விவசாயிகள் நலச்சங்கம் கலெக்டரிடம் மனு
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட விடிவெள்ளி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
வேலப்பாடி, புனலப்பாடி, கல்லேரிப்பட்டு, விளை, புதுப்பட்டு, நெசல், விளைசித்தேதி, வடுகசாத்து, தெள்ளூர் ஆகிய ஊராட்சிகள் சேர்ந்து விடிவெள்ளி விவசாய சங்க உறுப்பினர்கள் கடந்த ஆண்டுகளில் கூட்டுறவு சங்கத்தில் கடனைப்பெற்று புதுப்பித்து வருகிறோம். தற்போது பயிர் சாகுபடி சேதமான நிலையில் கடனை ரொக்கமாக கட்டுமாறு சங்கத்தின் மூலம் வற்புறுத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக பாதித்து வந்த நிலையிலும், அதனை தொடர்ந்து வரலாறு காணாத மழை பெய்து அதிக அளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் கூட்டுறவு கடனை ரொக்கமாக கட்ட வேண்டும் என கூட்டுறவு சங்கங்கள் கட்டாயப்படுத்தியும், வற்புறுத்தியும் வசூல் செய்வது விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளுகின்றது.
எனவே இந்த நிலைபாட்டினை மாற்றி தற்போது உள்ள பாதிப்பான நேரத்தில், புதிய நடைமுறைகளின்படி ரொக்கமாக கடனை கட்டி புதுப்பிப்பதை தவிர்த்து சிட்டா, அடங்கல் மட்டும் பெற்று விவசாயிகளின் நலனை காக்கும்படியும் கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.