திருவண்ணாமலை குயவர் மட நிர்வாகிகளை கண்டித்து முற்றுகை போராட்டம்; போலீசார் குவிந்ததால் திடீர் பரபரப்பு
திருவண்ணாமலையில், குயவர் மடத்தில் 28 ஆண்டாக தேர்தல் நடத்தாததை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு நிலவியது
HIGHLIGHTS
திருவண்ணாமலையில், கொசமட தெருவில் குயவர் மடம் செயல்பட்டு வருகின்றது. இந்த மடத்தில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று உள்ளதாகவும், 28 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் தன்னிச்சையாக தற்போதைய நிர்வாகிகள் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இதனை கண்டித்து குயவர் சமூக மக்கள் குயவர் மடத்தின் முன்பு திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளி குலாலர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, போராட்டத்தினர் அப்பகுதியில் பிள்ளையார் கோவில் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து திரளாக சென்று, குயவர் மடத்தை முற்றுகையிட்டனர். தற்போது தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கடந்த 28 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் தன்னிச்சையாக செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குயவர் சமூக மக்களுக்கு மடத்தில் முன்னுரிமை மற்றும் தங்குவதற்கு அனுமதி மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
மடத்திற்குள் போராட்டத்தினர் யாரும் புகுந்து விடாமல் இருப்பதற்காக முன்பக்க இரும்பு கேட் பூட்டு போட்டு பூட்டப்பட்டது.. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருவண்ணாமலை டவுன் காவல்துறையினர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, போராட்டத்தினர் அங்கிருந்து புறப்பட்டு சென்று, ஆட்சியர் முருகேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த குயவர் மடம் திருவண்ணாமலையில் பிரதான சாலையில் அதாவது பாரத ஸ்டேட் வங்கிக்கு பக்கத்திலும் காந்தி, அண்ணா சிலைக்கும் மத்தியிலும் அமைந்துள்ளது. மடத்திற்கு சொந்தமான பல கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கார்த்திகை தீபத் திருவிழாக்களின் போது இந்த மடத்திற்கு சொந்தமான மிகப்பெரிய மைதானத்தில் பொருட்காட்சிகள் நடத்துவதும் வழக்கம். மைதான காலி இடம் மட்டும் பல கோடி ரூபாய் மதிப்புடையபோது, என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்திற்கு வந்திருந்த நிர்வாகிகளில் சிலர் கூறும்போது, மடத்தின் ஒரு சில நிர்வாகிகள் இந்த காலி மைதானத்தை முறைகேடாக விற்பனை செய்வதற்கும், பணத்தை சுருட்டுவதற்கும் முயற்சிப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.