/* */

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
X

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருவண்ணாமலையில் 14 மாடி வீடுகள் உள்பட 17 வீடுகளை இடிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடந்தது. அப்போது பெண்கள் ரோட்டில் அழுது புரண்டனர்.

பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆன்மீக நகரமான திருவண்ணாமலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மொத்தம் 365 குளங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இந்த குளங்கள் எல்லாம் காணாமல் போய் விட்டன. தற்போது 150க்கும் குறைவாகவே குளங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் இருந்த பல குளங்கள் தற்போது கட்டிடமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை உழவர் சந்தை அருகே உள்ள பொருளாம்குளம், காந்தி நகர் அருகே சக்தி விநாயகர் கோயில் அருகில் உள்ள வேடியப்பன் குளம், பிள்ளைகுளம் ஆகிய மூன்று குளங்களுக்கு சொந்தமான பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சிலர் தொடர்ந்த வழக்கில் அந்த ஆக்கிரமிப்புகளை இடித்து அப்புறப்படுத்தி வருகிற 1ந் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் வெற்றிவேல் மேற்பார்வையில் தாசில்தார் சுரேஷ் தலைமையில் வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள் போலீசாருடன் சென்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

உழவர் சந்தை அருகே உள்ள பொருளாம் குள பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள 3 வீடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் மாற்று இடம் வழங்கி விட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். அப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி புல்டோசர் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வேடியப்பன் குளம் மற்றும் பிள்ளை குளம் ஆகிய பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்ற அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த குளங்களைச் சுற்றி 74 வீடுகள் இருந்ததாகவும், நீண்ட காலமாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க கருணாநிதி முதல்வராக இருந்த போது கொண்டு வரப்பட்ட சட்டத்தின் காரணமாக அந்த வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பட்டா வழங்கப்படாத ஓரடுக்கு, 2 அடுக்கிலான மாடி வீடுகள் 14 , 2 ஓட்டு வீடு, 1 கூரை வீடு என 17 வீடுகளை இடிக்க அதிகாரிகள் சென்ற போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இங்கிருந்து நாங்கள் காலி செய்ய முடியாது பல ஆண்டுகளாக இங்கேயே வாழ்ந்து வருகிறோம் என எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சில பெண்கள் ரோட்டில் அழுது புரண்டனர்.

ஆக்கிரமிப்பில் நாங்கள் இருக்கிறோம் என்றால் எங்களிடம் குடிநீர் வரி, வீட்டு வரி வாங்கியது ஏன்? என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது கோர்ட்டு உத்தரவு, எங்களால் என்ன செய்ய முடியும்? என அதிகாரிகளும், கவுன்சிலர்களும் கூறினர். பிறகு போலீசார் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். நீண்ட நேரமாக அவர்கள் கோஷம் போட்டுக் கொண்டே நின்றிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் வெற்றிவேல், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், திமுக, கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது.

வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டதிலிருந்து 45 நாட்கள் அவகாசம் அளித்திட வேண்டும் என்ற நிலையில் கடந்த 21ந் தேதி நோட்டீசை வழங்கி விட்டு 1வாரத்திற்குள் வீட்டை இடிக்க வரலாமா? என பாதிக்கப்பட்டவர்கள் ஆவேசத்துடன் கேட்டனர்.

தொடர்ந்து பொதுமக்களின் எதிர்ப்புக்கிடையே வேடியப்பன் குளப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. அசம்பாவிதங்களை தடுக்க டிஎஸ்பி குணசேகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 30 Aug 2022 12:40 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்