தாய்ப்பாலுக்கு நிகராக கருதப்படும் தீர்த்த குளத்தை தூர்வாரிய சிவன் அடியார்கள்
திருவண்ணாமலை மலை மேல் உள்ள தீர்த்த குளத்தை சிவனடியார்கள் தூர் வாரினர்.
HIGHLIGHTS
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலும் மலையும் சிறப்பானதாகும். கிரிவலம் மற்றும் கார்த்திகை தீபம் போன்ற நிகழ்ச்சிகள் உலகெங்கும் பிரசித்தி பெற்றதாகும்.
இம்மலையின் அமைப்பு ஒவ்வொரு திசையில் இருந்தும் பார்க்கும்போது ஒவ்வொரு மாதிரியாக காட்சியளிப்பது இதன் சிறப்பாகும். மலையை கீழ் திசையில் இருந்து பார்க்கும்போது ஒன்றாக தெரியும். சுற்றுப்பாதையில் இருந்து பார்க்கும்போது இரண்டாக தெரியும். இதனை அர்த்தநாரீஸ்வரர் காட்சி என்பர். கிரிவலம் சுற்றி முடிக்கும் போது ஐந்தாக தோன்றி பஞ்சமுக தரிசனம் காட்சி தரும்.
இம்மலையில் முலைப்பால் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், பாத தீர்த்தம் போன்ற பல தீர்த்தங்களும் மலையில் உள்ளன.
மேலும் இம்மலையில் கந்தாஸ்ரமம், விருப்பாச்சி குகை ஆசிரமம், குகை, நமச்சிவாயர் ஆசிரமம், மாமரத்து கோயில், சடை சாமி கோயில் என புகழ்பெற்ற கோயில்கள் அமைந்திருக்கின்றன.
அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள மலையேறும் பாதையில் ஏறி சென்றாள் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது முலைப்பால் தீர்த்தம்.
சித்தர்கள் இந்த தீர்த்தத்தில் இருந்து தண்ணீரை அருந்தி உயிர் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. மலை உச்சியிலிருந்து மழை நீர் பல மூலிகைகள் மேல்பட்டு இந்த தீர்த்தத்தை வந்து அடைகிறது
மேலும் மலையில் பல ஊற்றுகள் உள்ளன. இதனால் இது புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது ப்ளூ கலரில் தெரியும் இந்த தண்ணீரை பாட்டில் பிடித்து பார்த்தால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் போன்று வெள்ளை வெளேர் என்று காட்சி அளிக்கும், இந்த தண்ணீரும் மிகவும் சுவை நிறைந்ததாக காணப்படும்.
தாய்ப்பாலை போன்று குணம் கொண்டது, நோய் தீர்க்கும் அருமருந்து என்றும் தீர்த்தத்தை கூறுவர்.
இந்த நீரை தான் சுற்றுப்புற கோயில்களுக்கு அன்னதானம் தயாரிக்கவும், மலையின் கீழ் உள்ள வீடுகளுக்கு குடிதண்ணீரும் வழங்கப்படுகிறது, கோடை காலத்தில் எவ்வளவு தான் தண்ணீர் பஞ்சம் வந்தாலும் இங்கு தண்ணீர் குறையாமல் வற்றாமல் காட்சியளிக்கிறது. இந்த தீர்த்தம் தற்போது அசுத்தம் நிறைந்ததாக காணப்பட்டது.
இந்த புனித தீர்த்தத்தை சடை சுவாமி ஞான தேசிகர் மடத்தை சேர்ந்த சிவன் அடியார்களும், ஆன்மீக பக்தர்களும் இணைந்து கடந்த இரு தினங்களாக சுமார் 30 அடி ஆழம் கொண்ட முலைப்பால் தீர்த்தத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலையில் தொடங்கி இரவு வரை நாள் முழுவதும் அயராது இப்பணியை செய்து முடித்தனர்
திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரமாக மழை இல்லாமல் வெப்பம் சுட்டெரித்தது. தூர் வாரும் பணி முடிந்த சில நிமிடங்களிலேயே அண்ணாமலையார் அருளால் மழை பெய்ய தொடங்கியது. இதனைப் பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்து அண்ணாமலையார் அரோகரா என மலையைப் பார்த்து பரவசம் அடைந்தனர்.
இன்னும் அதிக மழை பெய்யத் தொடங்கினால் இந்த தீர்த்த முழுவதும் நிரம்பிவிடும் என தெரிவித்தனர். ஒரே நாளில் மலை மீது உள்ள தீர்த்தத்தை சுத்தம் செய்த பக்தர்களுக்கு திருவண்ணாமலை பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.