ரயில் நிலையங்களை மேம்படுத்த 32 கோடி நிதி ஒதுக்கீடு: அண்ணாதுரை எம்.பி
திருவண்ணாமலை உள்ளிட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்த 32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அண்ணாதுரை எம்.பி தெரிவித்துள்ளார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.32.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அண்ணாதுரை எம்.பி. தெரிவித்துள்ளார்.
ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் 'அம்ரீத் பாரத்' ரயில் நிலைய திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று அண்ணாதுரை எம்.பி. நாடாளுமன்றத்திலும், மத்திய ரயில்வே மந்திரியிடமும் வலியுறுத்தி உள்ளார்.
அதைத்தொடர்ந்து 'அம்ரீத் பாரத்' திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.32.25 கோடி ஒதுக்கீடு செய்து ரயில்வே துறை உத்தரவிட்டு உள்ளது. மேலும் அதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அண்ணாதுரை எம்.பி. கூறியதாவது:-
'அம்ரீத் பாரத்' திட்டத்தில் திருவண்ணாமலையை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதான் அடிப்படையில் கடந்த நிதி ஆண்டில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆன்மிக நகரம் என்ற அடிப்படையில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினேன். அதன்படி, நடப்பு நிதி ஆண்டில் திருவண்ணாமலை ரயில் நிலைய மேம்பாட்டிற்காக கூடுதலாக ரூ.6.25 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைத்திட பணியாற்ற வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார் அதன்படி பொதுப்பணித்துறை அமைச்சரின் ஆலோசனை பெற்று தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியால் தற்போது திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் நிதி பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்