திமுக ஆட்சியையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது - அமைச்சர் வேலு பேச்சு
திமுக ஆட்சியையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது , என அமைச்சர் வேலு கூறினார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமன ஆணைகள் வழங்கும் விழா ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 452 கோயில்களுக்கு 748 பரம்பரை முறை வழிசாரா அறங்காவலா்கள் நியமனம் செய்யப்பட்டதற்கான ஆணைகளை வழங்கிப் பேசினாா்.
அப்போது அவர் பேசுகையில்,
அறநிலையத்துறை கண்காணிப்பில், ஆலயங்களைக் காப்போம் என்பதுதான் தற்போதைய ஆட்சியின் தாரக மந்திரம். தற்போதைய திராவிட மாடல் ஆட்சியையும் ஆன்மிகத்தையும் பிரித்தே பார்க்க முடியாது, இரண்டும் ஒன்றுதான் என்ற வகையில் தற்போதைய ஆட்சி நடந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சியில்தான், 788 கோயில்களுக்கு குடமுழக்கு நடைபெற்று உள்ளது.
கிராம கோயில்கள் திருப்பணிக்காக ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது திமுக ஆட்சி தான் என்று கூறினார்.
மேலும், ஆண்டுக்கு 1250 கோயில்களுக்கு திருப்பணி செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஆணையிட்டதின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து தற்போது குடமுழுக்கு நடைபெற்று வருகின்றது. கிராமப்புறங்களில் உள்ள 2500 ஆதிதிராவிட கோயில்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அறங்காவலராக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பொது நோக்கோடும் சமூக நல்லிணக்கத்தோடும் பணியாற்ற வேண்டும் திருக்கோயில்களில் உள்ள கடவுள்களுக்கு சாதி என்பது இல்லை ஆகவே அறங்காவலர்கள் சாதி அடிப்படையில் பணியாற்றக்கூடாது அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களையும் சமமாக பார்க்க வேண்டும்,
மேலும் 100 கோடி ரூபாய் மதிப்பில் வடலூரில் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் மைய கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தில் உள்ள 13 ஆயிரத்து 580 கிராம கோயில்கள் ரூபாய் 129 கோடி அளவில் ஒருவேளை பூஜைக்கு தற்போதைய அரசு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
திருக்கோயிலில் பணிபுரியும் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள்கள் அளிக்கப்பட்டுள்ளது, மேலும் நலவாரியம் அமைத்தும் பூசாரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பல திட்டங்களை வழங்கியது தற்போதைய திமுக ஆட்சி தான் என்றும், அறநிலையத்துறை கண்காணிப்பில் ஆலயங்களை காப்போம் என்பதுதான், தற்போதைய ஆட்சியின் தாரக மந்திரம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, அம்பேத்குமார், சரவணன், ஜோதி, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே கம்பன், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் தரணிவேந்தன், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் சேகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.