பயிர்கடன் பெறுவதை எளிமை படுத்துவது குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை
கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் பெறுவதை எளிமை படுத்துவது குறித்து விவசாயிகளுடன் மாநில பதிவாளர் ஆலோசனை மேற்கொண்டார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல பதிவாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர் வசந்த லட்சுமி முன்னிலை வகித்தார்.
அப்போது கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு முறையாக பயிர்க்கடன் வழங்கப்படுகிறதா, பயிர்கடன் வழங்குவதை மேலும் எளிமைப்படுத்துவது எப்படி, சங்கங்கள் மூலம் உர விற்பனை முறையாக நடைபெறுகிறதா போன்றவற்றை விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பயிர் கடன் வழங்க லஞ்சம் கேட்கின்றனர் . லஞ்சம் தராவிட்டால் கடன் தொகையை குறைத்து விடுகின்றனர் என்று முறையிட்டனர். இதற்கு பதிலளித்த பதிவாளர் விவசாயிகளின் பிரச்சினைகள் ஓரிரு நாளில் தீர்த்து வைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இக்கூட்டத்தில் கூட்டுறவு வங்கியின் உதவி பொது மேலாளர்கள், கூட்டுறவு சார்பதிவாளர், கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.