திருவண்ணாமலையில் தம்பியை எதிர்த்து அண்ணன் தீவிர தேர்தல் பிரசாரம்
திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பியை எதிர்த்து காங். வேட்பாளரை ஆதரித்து திமுகவை சேர்ந்த அண்ணன் தீவிர தேர்தல் பிரசாரம்
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் நகராட்சி மன்றத் தேர்தலில் 16 வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அருண் பாபுவுக்கு ஆதரவாக அமைச்சர் எ வ.வேலு, திமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் கம்பன் , முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் நேரு, திமுக மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் கமலேஷ் குமார் ஜெயின் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கமலேஷ் குமார் இதே வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் சந்திர பிரகாஷ் ஜெயினின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலேஷ் குமார் கூறுகையில், எங்களது கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அருண் பாபு வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவோம். அமைச்சர் எ வ.வேலு அவர்களின் வழிகாட்டுதலின் படி அய்யங்குளம் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்படும். மேலும் இந்த வார்டில் உள்ள பொதுக் கிணறுகள் தூர்வாரப்படும். நகராட்சி மூலம் பொது மக்களின் தேவைக்கு தினமும் சுத்தமான சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும்.
அண்ணாமலையார் ஒவ்வொருவருடமும் தீபத் திருவிழாவின்போது தெப்ப உற்சவம் மற்றும் தீர்த்தவாரிக்கு அய்யங் குளத்தில் எழுந்தருளும் வழி முழுவதும் சிமெண்ட் சாலை ஆக தரம் உயர்த்தி தரப்படும். இப்பகுதியில் அமைந்துள்ள திருக்கோயில்களை சுத்தம் செய்து காம்பவுண்ட் சுவர் அமைத்து தரப்படும். இந்த வார்டிற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவோம் என கூறினார்.