திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் சார்பில் ரத்ததான முகாம்
திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் அமைப்பு சார்பில் நடந்த ரத்ததான முகாமை துணை சபாநாயகர் பிச்சாண்டி துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை துணை சபாநாயகர் பிச்சாண்டி துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலையில் உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட ரெட் கிராஸ் சங்கம், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை நகர் மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார், நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார்.
ரெட் கிராஸ் உறுதிமொழியுடன் தொடங்கிய முகாமில் திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் சங்கம் தலைவர் இந்திர ராஜன் வரவேற்புரையாற்றினார். ரத்ததான முகாமை துவக்கி வைத்து பேசிய துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி,
ரத்த தானம் என்பது ஒருவர் தனது இரத்தத்தைப் பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ள தானமாக வழங்குவது ஆகும். ஆரோக்கியமாக உள்ள ஒரு நபரின் உடலில் இருந்து 6 லிட்டர் ரத்தம் உள்ளது. அதில் சுமார் 300 மில்லி லிட்டர் ரத்தம் தானமாக கொடுக்கலாம். தொடர்ச்சியாக ரத்ததானம் கொடுக்க விரும்புபவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் வழங்கலாம் என்றார்.
முன்னதாக ரத்ததானம் அவசியம் குறித்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் விஜயகுமார் விளக்கமாக எடுத்துரைத்தார். விழாவில் வெற்றித் தமிழர் பேரவை தலைவர் கார்த்திக் வேல்மாறன், மருத்துவர்கள் பவித்ரா, சந்திரிகா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தானம் பெறப்பட்ட ரத்தம் அனைத்தும் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது. ரத்ததானம் செய்பவர்களுக்கு ரெட்கிராஸ் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.