திருவண்ணாமலையில் சொத்து அபகரிப்பு கண்டித்து மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
சொத்து அபகரிப்பு கண்டித்து தீக்குளிக்க முயன்ற பெண்ணால் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்வு கூட்டத்தின் போது மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
அதைத் தடுக்க கலெக்டர் அலுவலக பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வரும் பொதுமக்களையும், அவர்களின் உடமைகளையும் போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்புகின்றனர்.
கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூதாட்டி ஒருவர் தனது கையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து வந்து, தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்த போலீசார் ஓடிச்சென்று மூதாட்டியை தடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் மூதாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் மூதாட்டி கூறும்போது
எனது பெயர் அன்னப்பூரணி (வயது 70). நான் பெரியகிளாம்பாடி, கொல்லகொட்டா கிராமத்தில் வசித்து வருகிறேன். என்னுடைய கணவர் பெயர் லட்சுமணன். அவர் இறந்துவிட்டார். நான் தனியாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் எனது குடும்ப சொத்தை சிலர் அபகரித்து விட்டனர். அதனால் தான் தீக்குளிக்க முயன்றேன் என்றார். பின்னர் போலீசார் இதுபோன்று முயற்சியில் இனி ஈடுபடக் கூடாது, என எச்சரித்து மூதாட்டியை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தண்டராம்பட்டு தாலுகா வேப்பூர்செக்கடி காமராஜர் நகரை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
வேப்பூர்செக்கடி காமராஜர் நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் காமராஜர் நகரில் உள்ள ஏரி பகுதியின் அருகே 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் பலருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 14 குடும்பங்களை சேர்ந்த எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. எங்கள் வீடுகள் நீர்ப்பிடிப்பு பகுதியில் இல்லை. ஆனால் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி வீடுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்நிலைக்கு எந்தவித தொடர்பும் இன்றி எங்களது வீடுகள் அமைந்துள்ளன. நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் வசித்து வருகிறோம். எனவே ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும். எங்களுக்கு வீட்டுமனை பட்டாவும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த மனுவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பெற்றுக்கொண்டார்