திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு விழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு விழா இன்று நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆனி பிரம்மோற்சவ திருவிழா ஆகும்.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும். இதில் சூரியன் வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி நகரும் காலமான ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக தட்சிணாயன புண்ணிய கால விழா கடந்த 8 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது.
ஆனி பிரசோற்சவ விழாவை முன்னிட்டு, தொடர்ந்து 10 நாட்களுக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெற்ற ஆனி பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் தனித்தனி, சிறப்பு அலங்காரத்தில் வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்கள்.
பத்தாம் நாள் இன்று ஐயங்குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று அதிகாலை திருக்கோவிலின் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சந்தரசேகரர் மாடவீதி உலா பின் ஐயங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
ஐயங்குளம் தற்போது தூர்வாரப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர் டிவிஎஸ் ராஜாராம், திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி மற்றும் அறங்காவலர்கள் , கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
பரத நாட்டியம் ஆடி உலக சாதனை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில் 407 பரத நாட்டிய மாணவிகள் பங்கேற்ற செம்மொழி உலக சாதனை புத்தகத்தில் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அவர்கள் சைவ சமய குரவர்கள் நால்வரின் (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்) சைவத் திருமுறைகளின் கருத்தாக்கத்தை 15 நிமிடங்கள் பரத நாட்டிய அசைவுகள் மூலம் வெளிப்படுத்தினர்.
சென்னை கொரட்டூரில் உள்ள சங்கர நாட்டிய வித்யாலயா சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சங்கீதா சிவகுமார் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற மாணவிகளுக்கு செம்மொழி உலக சாதனை புத்தக நிறுவனத்தின் சார்பில் உலக சாதனை சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.