திருவண்ணாமலையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
எடப்பாடியார் மீது பொய் வழக்கு பதிவு செய்த திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
HIGHLIGHTS
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்து நேற்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் திருவண்ணாமலை அறிவாளி பூங்கா அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ கலந்துகொண்டு கண்டண உரையாற்றினார்.
அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது,
திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு மட்டுமல்ல, முன்னாள் முதல்வருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத ஒரு செயலிழந்த துறையாக காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக செயல்பட்டது.
மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் முன்னாள் முதல்வர் மீது இந்த பொய் வழக்கு போடப்பட்டுள்ளது..தற்போது திமுக ஆட்சியில் தமிழக காவல்துறை ஸ்டாலின் சொல்லும் நபர்கள் மீதும், அதிமுக மீதும் வழக்கு போடும் ஏவல் துறையாக செயல்படுகிறது.
அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியால், ஜெயலலிதா மீது வழக்கு போடப்பட்டது. அத்தனை வழக்குகளும் நீதி மன்றங்கள் மூலமாக சந்தித்தவர்கள் அதிமுக கட்சியினர். தொடர்ந்து இந்த இயக்கத்தின் மீதும், தொண்டர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து இந்த இயக்கத்தை முடக்கி விடலாம், அழித்துவிடலாம் என்றும் பகல் கனவு கண்டு வருகிறார்.
அதிமுக மீது ஒரு வழக்கு அல்ல ஒரு கோடி வழக்கு போட்டாலும் அதனை எதிர்கொள்ள எங்களாலும் எங்கள் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியாலும் முடியும்.. அதிமுக என்ற இயக்கம் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு பல்வேறு சோதனைகளை கடந்தும் வழக்குகளை கடந்தும் தமிழகத்தில் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்த இயக்கம் , இந்த இயக்கத்தை அழிக்க முடியாது.
திமுக ஆட்சி பொறுப்பேற்று மக்களுக்கான எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மாறாக முன்னாள் அமைச்சர்கள் மீதும் கழக பொதுச் செயலாளர் மீதும் வழக்கு பதிவு செய்து செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம் இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பேசினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக நகர செயலாளர் செல்வம், முன்னாள் அரசு வழக்கறிஞர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், இந்நாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர மன்ற உறுப்பினர்கள் , ஒன்றிய குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.