ஆரணியில் பேருந்து நிலையம் அமைக்க மக்கள் கோரிக்கை
ஆரணியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என, 30 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மக்கள் கோரிக்கையை ஏற்று பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி ஆரணி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம், தபால் நிலையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. ஆரணியில் பெரும்பாலும் இப்பகுதி மக்கள் நெசவுத்தொழில் செய்கின்றனர் இங்கு தயாராகும் பட்டுப் புடவைகள் காட்டன் புடவைகள் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் ஆரணி சுற்றியுள்ள மங்களம், காரணி, மல்லியம் குப்பம், புதுப்பாளையம், திருநிலை, போந்த வாக்கம், கல்லூர் பாலவாக்கம், உள்ளிட்ட 10 க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர் இப்பகுதிகளில் விளைவிக்கும் காய் கனிகள், கீரை வகைகள் அறுவடை செய்து அவற்றை ஆரணிக்கு கொண்டு வந்து அங்கிருந்து சென்னை கோயம்பேடு, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகளில் ஏற்றுச்சென்று விற்பனை செய்து வருவார்கள்.
இது மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆரணி அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு நூற்றுக்கணக்கான மாணவி,மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆரணி பேரூராட்சியில் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், மாணவி, மாணவர்கள் காத்திருந்து பயணம் செய்ய பேருந்து நிலையம் இல்லாத காரணத்தினால் சாலை ஓரத்தில் உள்ள கடையின் கூரைகளில் நின்று மழைக்காலங்களில் மழையில் நனைந்து செல்லும் நிலை உள்ளது இப்பகுதியில் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாகவே தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். எனவே மக்கள் கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அதிகாரிகள் முனவர வேண்டும்.