திருவள்ளூர் அருகே கள்ளக்காதலனுடன் சென்ற பெண் மர்மமாக உயிரிழப்பு
திருவள்ளூர் அருகே கள்ளக்காதலனுடன் சென்ற பெண் மர்மமாக உயிரிழந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எருமை வெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (வயது36). பள்ளி பேருந்து ஓட்டுனரான இவரது மனைவி அமுதா (30). இவர்களுக்கு ஜெயஸ்ரீ (10)மற்றும் கிஷோர் (7) ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில் பாபுவின் மனைவி அமுதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதீஸ்வரன் என்பவருக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டதையடுத்து கணவன் குழந்தைகளை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
பாண்டிச்சேரியில் இருந்த அமுதாவை அவரது உறவினர்கள் 20 நாட்களுக்குப் பிறகு அழைத்துவந்து பாபுவிடம் சமாதானம் பேசி வீட்டில் விட்டுச் சென்றனர். இந்நிலையில் மீண்டும் அதே ஜோதீஸ்வரன் என்பவருடன் வீட்டைவிட்டு சென்றவரை அடுத்த நாளே மீண்டும் அழைத்து வந்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து 3-வது முறையாக கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஜோதீஸ்வரன் என்பவருடன் சென்றவர் எங்கு சென்றார் என்பது தெரியாமல் பாபு தேடி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாபுவின் நண்பரான சிவப்பிரகாசம் என்பவர் மனைவி அமுதா இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்ததால் புழல் அருகே பார்த்து விசாரித்த போது, ஜோதீஸ்வரன் ஏமாற்றிவிட்டதாகவும், தன்னை செத்துப் போ என்று சொல்லியதால் மன உளைச்சலில் இருப்பதாகவும் கணவன் பாபுவிடம் தெரிவித்த அமுதா அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம் கம்பர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அமுதா இறந்து கிடப்பதாக பாபுவின் நண்பர் சிவபிரகாசம் நேற்று காலை பாபுவுக்கு தொலைபேசியில் கொடுத்த தகவலின் பேரில் நேரில் சென்று பார்த்த போது, உடல் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில் தனது மனைவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கணவர் பாபு தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் நகர காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீபபி வழக்குப் பதிவுசெய்து அமுதாவின் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.