பொன்னேரி அருகே கிராமத்திற்கு சொந்தமான கடை 25 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு
பொன்னேரி அருகே மீனவ மக்களின் ஒற்றுமையால் கிராமத்திற்கு சொந்தமான கடை 25 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டது.
HIGHLIGHTS
பழவேற்காடு அருகே கிராமத்திற்கு சொந்தமான கடையை 25 ஆண்டுகளுக்கு பிறகு கிராம மக்கள் மீட்டெடுத்து உள்ளனர். மீனவ மக்களின் ஒற்றுமையால் கிராம மக்களுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த ரஹ்மத் நகர் எனும் மீனவ கிராமத்துக்கு சொந்தமான மீனவ கூட்டுறவு சங்கத்தின் மூலம் வழங்கப்பட்ட கடையினை 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த சம்பவம் நடந்தேறியுள்ளது. பழவேற்காட்டில் உள்ள 33 மீனவ கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த கிராமங்களுக்கு கடைகள் வழங்கப்பட்டு கிராம பயன்பாட்டிற்கு அக்கடைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு ரஹமத்நகர் மக்கள் தற்போது மாவட்ட கவுன்சிலராக உள்ள தேசராணி தேசப்பன் கணவராகிய தேசப்பன் என்பவருக்கு கடையை வாடகைக்கு விட்டுள்ளனர். கடந்த 20 வருடங்களாக வாடகையும் கொடுக்காமல் கடையையும் காலி செய்யாமல் கிராம மக்களை அலைக்கழித்து வந்த தேசப்பன் மீது மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் மீனவ கிராம கூட்டமைப்பில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் தற்போது அவர் தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் என்பதால் தி.மு.க. மாவட்ட செயலாளரான டி.ஜே. கோவிந்தராஜன் என்பவரிடமும் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டு காலமாக இப்பிரச்சனை விசாரணையில் இருந்த நிலையில் ஆனால் இதுவரை தேசப்பன் விசாரணைக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ரஹ்மத் நகர் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கடை முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து 33 கிராம நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கடையை மீண்டும் ரஹமத் நகர் கிராம மக்களிடமே ஒப்படைக்க முடிவு செய்து கிராம மக்களிடம் சாவி ஒப்படைத்தனர். இதனால் பழவேற்காடு பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.25 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது கடையை மீட்டுக் கொடுத்த மீனவ கிராம பொதுமக்களுக்கு ரஹமத் நகர் கிராம மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.