சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க கோரிக்கை
Tiruvallur News -திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
Tiruvallur News -தமிழகத்தில் சாலைகளில் சுற்றி திரியும் மாடு, ஆடுகள் போன்ற கால்நடைகளால் விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. உள்ளூர் சாலைகளில் மட்டும் இன்றி தேசிய நெடுஞ்சாலைகளிலும் மாடுகள் மேய்வதால் உயிர்ப்பலி விபத்துக்கள் அன்றாடம் நடப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து தேசிய நெடுஞ்சாலைகளின் நடுவில் உள்ள சென்டர் மீடியன்களிலும் புல் முளைத்து இருப்பதால் அவற்றை மேய்வதற்கான வரும் மாடுகளால் தேசிய நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு அவை இறந்துவிடும் சூழலும் ஏற்படுகிறது.
நகரப்பகுதிகளில் வளரும் மாடுகள் சாலையில் மேய்ந்து விட்டு தார்சாலைகளில் அசை போட்டபடி உறங்குகின்றன. மழை காலத்து குளிருக்கு தார்சாலைகள் வெது வெதுப்பாக இருக்கும் என்பதால் மாடுகள் படுத்து உறங்குவதற்கு அந்த இடங்களை தேர்ந்தெடுக்கின்றன.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை தொழுவத்தில் அடைக்காமல் அவித்து விடுவதால் அந்த மாடுகள் சாலை ஓரங்களில் கிடைக்கும் காய்கனிகள் கழிவுகள் உணவகங்களில் இருந்து வெளியேறும் வாழை இலைகள் பேப்பர் உள்ளிட்டவை உண்பதற்காக சாலைகளில் சுற்றி திரிந்தும் சில நேரங்களில் மளிகை கடையில் வெளியே வைத்திருக்கும் அரிசி பருப்பு வகைகளையும் பழ வகைகளையும் அத்துமீறி உள்ள நுழைந்து தின்று அட்டகாசம் செய்து வருகின்றன. பெரியபாளையம் திருப்பதி சாலைகளில் உரிமையாளர்கள் அவிழ்த்து விடும் மாடுகள் நூற்றுக்கணக்கானவை சாலையை சுற்றித் திரிந்தும் சாலையில் அமர்ந்தும் இருப்பதால் இரவு நேரங்களில் அவ்வழியாக சென்று வரும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவைகள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகள் தொல்லை பற்றி பொதுமக்களும் கடை உரிமையாளர்கள் பலரும் குற்றச்சாட்டு வைத்தனர்.
எனவே இதுபோன்று மாடுகளை கட்டி வைக்காமல் அவிழ்த்து விட்டுவிடும் உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்க வேண்டும் மீறினால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து மாடுகளை பறிமுதல் செய்து அவற்றை கோசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோன்று பெரியபாளையம் அடுத்த குமரப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ராளாபாடி கிராமத்தின் பகுதியில் உள்ள புதுவாயில் பெரியபாளையம் சாலையில் அப்பகுதியில் உள்ள மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை கட்டாமல் விடுவதால் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் விவசாயிகள் பயிரிடும் காய்கனிகள், பூக்கள், நெற்பயிர்களில் இறங்கி பயிர்களை நாசம் செய்து வருவதாகவும் இது குறித்து பலமுறை மாட்டின் உரிமையாளர்களுக்கு விவசாயிகள் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2