நெல்லையில் ஆதரவற்றோர் சிறப்பு முகாமில் திறந்தவெளி கலை நிகழ்ச்சி நடைபெற்றது
ஆதரவற்றோர் முகாமில் கலைநிகழ்ச்சியை கண்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் முதியவர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
HIGHLIGHTS
நெல்லையில் ஆதரவற்றோர் முகாமில் திறந்தவெளி திரையரங்கம் போல் நடத்தப்பட்ட மெல்லிசை கச்சேரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது அதில் சமூக விலகலுடன் அமர்ந்து ரசித்த முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கொரோனா இரண்டாவது அலையில் வீட்டை விட்டு பல்வேறு காரணங்களால் வெளியேற்ற பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் என சாலையில் ஆங்காங்கே கிடந்தவர்களை மாநகராட்சி உதவியுடன் அரசு பள்ளி வளாகத்தில் சோயா என்ற தொண்டு நிறுவனத்தினர் பாதுகாத்து உணவு அளித்து வருகின்றனர்.
இந்த முகாமில் பெரும்பாலும் முதியோர்கள், மனரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் அதிகம் உள்ளனர். பெருந்தொற்று காலத்தில் மனரீதியாக கூடுதல் பாதிப்பு அடைந்து விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது சிறு விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளை தன்னார்வலர்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதி நிகழ்ச்சியாக நெல்லையில் உள்ள மேடை மெல்லிசை கலைஞர்களை கொண்டு ஒரு இசைக் கச்சேரி நடத்தினர். இதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். அதனை காண்பதற்காக வகுப்பறை நாற்காலிகள் மைதானத்தில் வரிசைப்படுத்தப்பட்டு திறந்தவெளி திரையரங்கம் போல பள்ளி வளாகம் மாறியது. மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் முதியவர்கள் அனைவரும் நாற்காலிகளில் ஒருவருக்கொருவர் சமூக விலகல் உடன் அமர்ந்துகொண்டு இசைக்கச்சேரியை பார்த்து ரசித்தனர்.
நோய்க்கு தீர்வு மருந்து மட்டுமல்ல நல்ல மனங்களின் ஒத்துழைப்பும், சேவையும் என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டியது.