தேசிய உயரம் தாண்டுதலில் சாதனை படைத்த தூத்துக்குடி மாணவியை பாராட்டிய கனிமொழி எம்.பி.
தேசிய அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்த தூத்துக்குடி மாணவி சஹானாவுக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு தெரிவித்தார்.
HIGHLIGHTS
அசாம் மாநிலம், கௌகாத்தியில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில், 37 ஆவது தேசிய அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி சஹானா தமிழகத்தின் சார்பில் பங்கேற்றார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு பெற்ற வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்ற நிலையில், தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற மாணவி சஹானா 1.68 சென்டி மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
சாதனைப் படைத்த மாணவி சஹானாவின் தந்தை பாலகிருஷ்ணன் தூத்துக்குடி வஉசி துறைமுக அதிகார ஆணையக் குழு உறுப்பினராக உள்ளார். வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்த மாணவி சஹானாவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், வெண்கலப் பதக்கம் வென்று தூத்துக்குடி திரும்பிய மாணவி சஹானாவுக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், யானை மூலம் அவருக்கு மாலை அணிவித்து ஆசி வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, மாணவி சஹானா செய்தியாளர்களிடம் கூறும்போது, 37 ஆவது தேசிய அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இதற்கு, உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் சிந்தடிக் மைதானம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்த மாணவி சஹானா, தேசிய அளவில் தங்க பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே தனது ஆசை என தெரிவித்தார்.
இந்த நிலையில், தேசிய அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் உயரம் தாண்டும் போட்டியில் பதக்கம் வென்ற தூத்துக்குடி கல்லூரி மாணவி சஹானா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவி சஹானா தான் வென்ற வெண்கல பதக்கத்தை கனிமொழிக்கு காண்பித்து மகிழ்ந்தார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் மாணவி சஹானாவின் பெற்றோர் உடனிருந்தனர். ஏற்கெனவே, வெண்கலப் பதக்கம் வென்றதும் மாணவி சஹானாவுக்கு, கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவு செய்திருந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 25 வருடத்திற்கு பின்பு, தற்போது உயரம் தாண்டுதல் போட்டியில் மாணவி சஹானா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். மாணவி சஹானா இதற்கு முன்பு குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும், ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான தேசிய போட்டியிலும் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.