தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்...
தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்படும் மாவட்டமாக தூத்துக்குடி திகழ்கிறது. மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. உப்பளத் தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இருப்பினும், உப்பளத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி ராஜபாண்டி நகரில் உள்ள உப்பளத் தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உப்பளங்களுக்கே நேரில் சென்று கலந்துரையாடி தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டிலேயே தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிகளவில் உப்பளங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் 70 சதவீத உப்பு உற்பத்தி தூத்துக்குடி மாவட்டத்தில்தான் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் உப்பளங்கள் உள்ளன.
மேலும், உப்பளத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனர். உப்பள தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் மழைக்கால நிவாரணம் முறையாக கிடைக்கிறதா என்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிவதற்கும் ராஜபாண்டி நகரில் உள்ள உப்பள தொழிலாளர்களுடன் கலந்துரையாடினேன்.
உப்பளத் தொழிலாளர்களுக்கு வருகிற பிப்ரவரி 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் துறையின் முயற்சியுடன் சங்கரா நேத்ராலயா போன்ற தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மாபெரும் மருத்துவ முகாம்கள் 9 இடங்களில் நடத்தப்பட உள்ளது.
முகாம்களின்போது, கண் பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் பொதுவான உடல் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு அட்டை வழங்குவதற்கும், கண் கண்ணாடிகள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கவும் உள்ளோம்.
தமிழக அரசின் மழைக்கால நிவாரணம் பெறுவதற்கான தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அட்டை வழங்குவதற்கும், ஆதார் எண் இணைப்பதற்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். உப்பளங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் ஓய்வு அறை வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்துள்ளனர்.
எனவே, உப்பளங்களில் அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கும், ஏற்கெனவே அடிப்படை வசதிகள் உள்ள உப்பளங்களில் முறைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.