தூத்துக்குடியில் வருகிற 28 -ம் தேதி திறன் மேம்பாடு வேலைவாய்ப்பு மாநாடு
தூத்துக்குடியில் அக்டோபர் 28 ஆம் தேதி கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த மாநாடு நடைபெறுகிறது.
HIGHLIGHTS
தூத்துக்குடியில் உள்ள புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான வ.உ. சிதம்பரம் கல்லூரி மூலம் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்வி, திறன், வேலைவாய்ப்பு குறித்த மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வ.உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர் சொ. வீரபாகு, இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தூத்துக்குடி பிரிவு துணைத் தலைவர் வெயிலா கே .ராஜா, முன்னாள் தலைவர் செந்தில் கண்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
மாணவர்களுக்கு கல்வி அளிப்பதோடு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய திறனையும் வழங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.முன்பெல்லாம் கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது கல்வித் தகுதியோடு மாணவர்களின் திறனும் சோதிக்கப்படுகின்றன. திறனுடையவர்களை தான் நிறுவனங்கள் பணிஅமர்த்துகின்றன. எனவே தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கக் கூடிய திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளும் வகையில் மிகப்பெரிய அளவிலான ஒரு மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவிகள் மட்டுமின்றி தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தென் மாவட்டங்களிலேயே முதல் முறையாக கல்வி, திறன், வேலைவாய்ப்பு ஆகியவை குறித்த மாநாட்டை கல்லூரியில் அக்டோபர் 28 ஆம் தேதி நடத்துகிறோம்.
கல்லூரி கலையரங்கில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் மாநாட்டை மாவட்ட கலெக்டர் கி. செந்தில்ராஜ் தொடங்கி வைக்கிறார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் என். சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகின்றனர்.
தொடக்க விழா நிகழ்ச்சிக்குப் பிறகு இரண்டு அமர்வுகள் நடைபெறுகிறது. பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் மனிதவள பிரிவு தலைவர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டு தங்களது தொழில் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் அதற்கு தேவையான படிப்புகள் குறித்து பேசுகின்றனர்.
இரண்டாவது அமர்வில் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் நிறுவனங்கள், வேலை தேடுவோரின் திறனை வளர்க்கும் பயிற்சி மையங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த மாநாட்டில் மாணவ, மாணவிகளுக்கு திறன் குறித்த பயிற்சி அளிப்பதோடு திறனை வளர்த்துக் கொள்வதற்கான நுட்பங்கள் சொல்லிக் கொடுக்கப்படும். கல்வி நிறுவனத்தில் இருந்து தொழில் நிறுவனங்களுக்கு மாணவர்களை இணைக்கும் ஒரு பாலமாக இந்த மாநாடு அமையும்.
இந்த மாநாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றனர் அவர்கள். பேட்டியின் போது இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) தூத்துக்குடி அலுவலக நிர்வாகி ரெஜின், வ.உ.சிதம்பரம் கல்லூரி பேராசிரியர் கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.