தூத்துக்குடி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவன் கண்மாயில் மூழ்கி உயிரிழப்பு
தூத்துக்குடி அத்திமரப்பட்டியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் கண்மாயில் மூழ்கி பலி உயிரிழந்தான்.
HIGHLIGHTS
தூத்துக்குடி ஸ்பிக் நகர் முத்தையாபுரம், பாரதி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து பெயிண்டர். இவரது மகன் சுடலை (15), எம்.சவேரியார்புரம் அரசு பள்ளியில் 9வது வகுப்பு படித்து வந்தான்.
நேற்று தெலுங்கு வருட பிறப்பு என்பதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளான். மதியம் நண்பர்களுடன் விளையாட சென்றான். இந்நிலையில் இரவாகியும் வீடு திரும்பவில்லை.
வேலைக்கு சென்று திரும்பிய மாரிமுத்து ஊரெங்கும் தேடிபார்த்தார். பின்னர் முத்தையாபுரம் காவல்நிலையத்தில் மகனை காாணவில்லை என் பெற்றோர் புகார் செய்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, அவரது நண்பர்கள் அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளனர்.
கோரம்பள்ளம் அத்திமரப்பட்டி 24 மடை கண்மாய் பகுதியில் குளித்தபோது சுடலை திடீரென்று தண்ணீருக்குள் மூழ்கிவிட்டதாகவும், அவனை மீட்க முயற்சி செய்து பார்த்தோம் முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் வீடு திரும்பிவிட்டோம். வெளியில் சொன்னால் போலீசார் கைது செய்வார்கள் என்று பயந்து வெளியில் சொல்லாமல் இருந்துட்டோம்'' என்று அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து போலீசார் நேற்று நள்ளிரவு 12 மணியளவில், கண்மாய் பகுதியில் தேடினார்கள் . இரவு இருள் சூழ்ந்திருந்ததால் சிறுவர்களுக்கும் அது குறித்து சரியான இடத்தை சொல்ல முடியவில்லை.
இதற்கிடையே இன்று அதிகாலையில் மாணவன் சுடலையின் உடல் அங்கே தண்ணீரில் மிதந்தது. தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.