தூத்துக்குடியை முன்னோடி மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை: மேயர் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி மாநகராட்சியை முன்னோடி மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
HIGHLIGHTS
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நகர பகுதி சபை கூட்டங்களும், கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்களும் இன்று நடைபெற்றன. தூத்துக்குடி மாநராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி 20 ஆவது வார்டு போல்பேட்டையில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்திற்கு, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். அப்போது அவர் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மக்கள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில் சாலைகளை சீரமைப்பது, முக்கிய சாலைகளில் குறிப்பிட்ட இடங்களில் வேகத்தடைகள் அமைப்பது, கழிவுநீர் கால்வாய்களை சீரமைப்பது, சுத்தமான குடிநீர் வழங்குவது என அனைத்துப் பணிகளும் துரிதமாக செய்து கொடுக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி அளித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
தூத்துக்குடி மாநகரின் 60 வார்டுகளிலும் மக்களுக்கான அடிப்படை பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து வார்டுகளிலும் சாலைகள் அமைத்திட திட்டம் வரையறை செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்று அனைத்து பகுதிகளிலும் புதிய சாலைகள் அமைக்கப்படும்.
ஒவ்வொரு வார்டு பகுதியிலும் நியமிக்கப்பட்டுள்ள குழுவினரிடமும், பொதுமக்களான நீங்கள் தெரிவிக்கும் புகார்கள் எங்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அவை உடனடியாக தீர்க்கப்படும். மாநகர் பகுதிகளில் தூசி அதிகமாக பரவும் இடங்களில் தார் சாலைகளுக்கு பதிலாக பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்படும். மாநகர் பகுதிகளில் மாசுவை குறைத்திட மரம் வளர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒவ்வொரும் தங்களது வீடுகளில் மரம், செடி, கொடிகளை வளர்க்க முன்வர வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் வீடுகள், அலுவலகங்களில் சேரும் குப்பைகளை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே கொட்ட வேண்டும். அதனை தவிர்த்து குப்பைகளை கண்டகண்ட இடங்களில் தூக்கி எறிய வேண்டாம். குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து கொடுத்திடுவது சிறப்பாகும்.
தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் நாள்தோறும் சேருகின்ற குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் 960 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு சுமார் 150 டன் குப்பைகள் வரை சேகரிக்கப்படுகிறது. இதில் 80ட ன் குப்பைகள் மக்கும் குப்பைகளாகும். மீதமுள்ள மக்காத குப்பைகள் தரம் பிரித்து அழிக்கப்படுகிறது.
மக்காத குப்பைகளில் 20 சதவீதம் அளவிற்கு பிளாஸ்டிக், பாலிதீன் கழிவுகள் சேருகிறது. பிளாஸ்டிக் பொருட்களின் பழக்கத்தை முற்றிலுமாக தடுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாலிதின் கவர்கள் பயன்படுத்துவதை தவிர்த்திடுவது அவசியமாகும்.
தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் பாலிதீன் பைகளை அனைவரும் தவிர்த்திடும் வகையில் மாநகராட்சியில் உள்ள வீடுகள் தோறும் என ஒன்றரை லட்சம் மஞ்சள் பைகள் தனியார்களின் பங்களிப்புடன் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாலிதின் கவர்களை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்திட வேண்டும். அனைத்து வார்டுகளுக்கும் மின் விளக்குகள் பொருத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
60 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாநகரை குப்பைகள் இல்லாத வகையில் சுத்தமான, சுகாதாரமான நகரமாக மாற்றிடும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சியை அனைத்து திட்டங்களிலும் மட்டுமல்ல அனைத்து பணிகளிலும் தன்னிறைவுபெற்ற மாநகராட்சியாக மாற்றிடவும், தமிழகத்திலேயே தூத்துக்குடி மாநகராட்சி முன்னோடி மாநகராட்சியாக திகழ்ந்திடவும் பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தந்திடவேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
கூட்டத்தில், தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.