தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் வேண்டுகோள்…
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான நவம்பர் மாதத்துக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் பேசிய விவசாயிகள் பலர் மாவட்டத்தில் உரத்தட்டுபாடு நிலவி வருவதாக புகார் தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசிய விவரம் வருமாறு:
தூத்துக்குடி மாவட்டத்தில் வருடாந்திர இயல்பான மழையளவு 662.20 மில்லி மீட்டர் ஆகும். இந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி வரை 345.52 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 70.5 மெட்ரிக் டன், கம்பு 29.6 மெட்ரிக் டன், சோளம் 2.3 மெட்ரிக் டன், உளுந்து 152.7 மெட்ரிக் டன், பாசிப்பயறு 11.9 மெட்ரிக் டன், நிலக்கடலை 2.12 மெட்ரிக் டன், சூரியகாந்தி 3.25 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
உரங்களை பொறுத்தவரை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் 2182 மெட்ரிக் டன் யூரியா, 3314 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 1653 மெட்ரிக் டன் டி.ஏ.பி மற்றும் 618 மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகிய உரங்கள் இருப்பில் உள்ளன.
திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 2022-23 ராபி பருவ பயிர்களான உளுந்து மற்றும் பாசிப்பயறு பயிர்களுக்கு நவம்பர் 15 ஆம் தேதி வரையிலும், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு நவம்பர் 30 ஆம் தேதி வரையிலும், சோளம் மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலும், கம்பு, எள் மற்றும் சூரியகாந்தி பயிர்களுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலும் விவசாயிகள் தங்களின் விருப்பத்தின் பேரில், உரிய பயிர்க் காப்பீட்டுக் கட்டணத்தை (பிரிமியம்) உரியகாலக் கெடுவுக்குள் தங்கள் பகுதியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வணிக வங்கிகளிலோ, பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ செலுத்தி, பாரதப் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 15 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சிறப்புற செயல்பட்டு வருகிறது. அவற்றின் மூலம் அதன் உறுப்பினர்கள் மட்டும் அல்லாது இதர விவசாய பெருமக்களின் விளை பொருட்களை நடப்பு சந்தை விலையில் கொள்முதல் செய்வதுடன் அவர்களுக்கு தேவையான விவசாய இடு பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் அதனை பயன்படுத்தி சரியான விலையில் இடு பொருட்கள் பெறுவதுடன் விளை பொருட்களை விற்று பயனடையவும்.
பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தில் பனை மற்றும் பிற உணவுப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் 35 சதவீத மானியம் அல்லது அதிக பட்சமாக ரூ. 10 லட்சம் மானியத்துடன் வங்கி கடன் பெற்று பயனடையலாம் என ஆட்சியர் செந்தில்ராஜ் பேசினார்.