தயவு செய்து சேர்க்காதீங்க: ஸ்டாலினுக்கு தேனி மாவட்ட தி.மு.க.வினர் கடிதம்
அதிமுகவிலிருந்து வரும் யாரையும் திமுகவில் சேர்க்காதீங்க என தேனி மாவட்ட திமுகவினர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உ ள்ளனர்
HIGHLIGHTS
தேனி மாவட்டத்தில் சில அ.தி.மு.க., நிர்வாகிகள் போலியாக பட்டா, பத்திரம் தயார் செய்து பலநுாறு ஏக்கர் பத்திரங்களை பதிவு செய்துள்ளனர். அரசு புறம்போக்கு நிலங்கள், வனப்புறம்போக்கு நிலங்களை இப்படி பல நுாறு ஏக்கர் வளைத்து போட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு அதிகாரிகள் பலரும் உடந்தையாக இருந்துள்ளனர். பல அ.தி.மு.க., நிர்வாகிகள் மீது பல்வேறு வழக்குகளும் உள்ளன.
இவர்கள் வழக்குகளில் இருந்து தப்பவும், தங்களது போலி ஆவணங்களின் மீது நடவடிக்கை வராமல் இருக்கவும், சொத்துக்களை பாதுகாக்கவும் தி.மு.க.,வில் சேர முயற்சி செய்கின்றனர். ஏற்கனவே தங்க.தமிழ்செல்வன் அ.தி.மு.க.,வில் தலைவராக இருந்த போது, அவருடன் நெருக்கமாக இருந்த இவர்கள், தங்க.தமிழ்செல்வன் தற்போது தி.மு.க.,விற்கு வந்து மிகப்பெரிய பொறுப்பு வகிப்பதால், அவர் மூலம் பழைய பழக்கத்தை பயன்படுத்தி தி.மு.க.,வில் சேர முயற்சிக்கின்றனர்.
ஆனால் இதனை தற்போது உள்ள தி.மு.க.வினர் யாரும் ரசிக்கவில்லை. தங்க.தமிழ்செல்வன் இவர்களை தி.மு.க.,வில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்வாரோ என நினைத்து நேரடியாக தலைமைக்கே கடிதம், தந்தி மூலம் புகார் அனுப்பி வருகின்றனர். சிலர் நேரடியாக ஸ்டாலினுக்கே கடிதம் அனுப்பி உ ள்ளனர்.
குறிப்பாக அவர்கள் யாரும் தொண்டர்கள் பலத்துடன் இல்லை. தவிர பொதுப்பணி செய்து நல்ல பெயர் வாங்கியவர்களும் இல்லை. தற்போது சொத்துக்களை பாதுகாக்கவும், வழக்குகளில் இருந்து தப்பவுமே இவர்கள் நமது கட்சிக்கு வருகின்றனர். இவர்களை எக்காரணம் கொண்டும் சேர்க்க வேண்டாம் என கடிதம், தந்தி, அனுப்பி வருகின்றனர். அதில் சேர முயற்சிப்பவர்களின் மேல் உள்ள முக்கிய குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் தலைமைக்கு அனுப்பி வருகின்றனர்.