ரயிலில் பாய்ந்து குழந்தைகளுடன் தாய் தற்கொலை: நெஞ்சை உலுக்கும் சோகம்..!
இரண்டு வயது மகன் உயிரிழப்பு. நான்கு வயது பெண் குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே, திருவாரூரில் இருந்து காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் முன் 32 வயது மதிக்கத்தக்க தாய், தனது 2 வயது ஆண் குழந்தை, 4 வயது பெண் குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மூவரையும் மீட்டு ரயில்வே காவல்துறையினர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் தாயும், 2 வயது ஆண் குழந்தையும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். 4 வயது பெண் குழந்தை படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இறந்த பெண் பெயர் மகேஸ்வரி (30), இறந்த ஆண் குழந்தையின் பெயர் தர்ஷன் (வயது 2), சிகிச்சை பெற்று வரும் பெண் குழந்தை பெயர் சமயாஸ்ரீ(4) என்பது தெரிய வந்தது. மகேஸ்வரியின் கணவர் பெயர் முருகானந்தம் (வயது 45), பட்டுக்கோட்டை நகராட்சி லட்சத்தோப்பு தெற்கு, பகுதியில் வசித்து வருவதும், தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நெல் குடோனில் தற்காலிக சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எதற்காக ரயில் முன் பாய்ந்தார் என விசாரணை நடைபெற்று வருகிறது.