தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கருப்பு உடையுடன் திரண்ட திருநங்கைகள்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கருப்பு உடையுடன் திரண்ட திருநங்கைகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்சியரிடம் மனு அளிக்க கருப்பு உடை அணிந்து 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.கோரிக்கை மனு குறித்து செய்தியாளர்களிடம் திருநங்கைகள் கூறியதாவது:-
நாங்கள் தென்காசி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம். எங்களுக்கு என்று தனியாக சொந்த வீடு கிடையாது. எனவே எங்களுக்கு சொந்தமாக இலவச வீட்டுமனை பட்டா வேண்டும் என மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இதுவரை தொழில் தொடங்குவதற்கு வங்கி கடன் அல்லது சமூக நலத்துறை சார்பில் மானிய கடன் பெற விண்ணப்பித்தாலும் ஒன்று இரண்டு நபர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
ஆனால் அதே சமயம் எங்களுக்கு கைத்தொழில் சம்பந்தமான எந்தவித பயிற்சியும் இதுவரை தென்காசியில் நடைபெறவில்லை. மாவட்டத்தை பொறுத்தவரை திருநங்கைகளுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை. தனியாக நடந்து சென்றாலும் கூட்டமாக சென்றாலும் தவறு செய்யாமலே காவல்துறையினர் மூலம் தண்டிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணமான போலீசார் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது இடங்களில் சில நபர்களால் மன உளைச்சலுக்கும் ஆளாகும் நிலை ஏற்படுகிறது. அதேபோல் காவல் நிலையத்திற்கு சென்றாலும் எங்களுக்கு உரிய மதிப்பளிப்பதில்லை. மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலே காவல்துறையினர் செயல்படுகின்றனர். எனவே எங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்ததாக தெரிவித்தனர்.