கடையம்; முயல், காடை கவுதாரியை வேட்டையாடி சமைத்த 5 பேருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
கடையம் அருகே முயல், காடை கவுதாரியை வேட்டையாடி சமைத்த 5 பேருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
HIGHLIGHTS
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சிறுத்தை, மான், கடா மான், கரடி, புலி, யானை, உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. இதனை அவ்வப்போது சில சமூக விரோதிகள் வேட்டையாடி வருகின்றனர். அப்போது வனத்துறை மற்றும் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அபராதம் விதிக்கின்றனர்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை கோட்டம் கடையம் வனச்சரகத்திற்கு வெளிமண்டல பகுதியான ஆம்பூர் பீட் பகுதியில் கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது ராமச்சந்திர புரத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி, சூரியநாராயணன், சரவணன், பிரபாகரன், முருகன் ஆகிய 5 பேர் வேட்டைக்கு சென்று காட்டு முயல் மற்றும் காடை கவுதாரியை கொன்று சுத்தம் செய்து சமைத்துக் கொண்டிருந்தனர்.
தொடர்ந்து 5 பேரையும் வனத்துறையினர் பிடித்து, விசாரணை நடத்தியதில் அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின் பேரில் தலா ரூ. 20 ஆயிரம் வீதம் என ஐந்து பேருக்கு ரூபாய் 1 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.