பிரசவத்தின்போது ஆசிரியை பலி: மருத்துவரை கைது செய்யக்கோரி மறியல்
சிவகங்கையில், பிரசவத்தின் போது ஆசிரியை உயிரிழந்தார். இதுதொடர்பாக, மருத்துவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
HIGHLIGHTS
சிவகங்கை அருகே உள்ள கோமாளிபட்டி ஊராட்சி பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக பாரதி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் இரண்டாவது பிரசவத்திற்காக, நேற்று முன்தினம் மாலை, சிவகங்கை தெப்பக்குளம் அருகே இயங்கி வரும் தனியார் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, அறுவை சிகிச்சையின் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
இதனிடையே, பிரசவத்தின்போது திடீர் என சிகிச்சை பலனின்றி ஆசிரியை பாரதி உயிரிழந்தார். இதனால், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியை பாரதியின் உயிரிழப்பிற்கு, மருத்துவமனை நிர்வாகத்தின் தவறான சிகிச்சையே காரணம் எனக்கூறி உறவினர்கள், தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் இன்றும் தொடர்ந்தது. பாரதியின் உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக சென்று சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே, சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனல், மானாமதுரை மற்றும் இளையான்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.