சிவகங்கையில் அரை நிர்வாண காேலத்தில் வாக்களிக்க வந்த வங்கி நகை மதிப்பீட்டாளர்
சிவகங்கையில், பணி நிரந்தரம் கோரி வங்கி நகை மதிப்பீட்டாளர் அரை நிர்வாணமாக வாக்களிக்க வந்ததால் பரபரப்பு.
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க வந்த வங்கிப் பணியாளர் பணி நிரந்தரம் செய்யக்கோரி அரை நிர்வாணமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கையை சேர்ந்த மகேஷ் பாபு என்பவர் மத்திய அரசு வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ஆக பணிபுரிந்து வருகிறார். நகை மதிப்பீட்டாளர்கள் மாநில சங்க செயல் தலைவராக பதவி வகிக்கும் இவர் இன்று, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க தனது சட்டை வேஷ்டியை களைந்து அரை நிர்வாணமாக பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பதாகையை கழுத்தில் தொங்கவிட்டபடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தடுத்து நிறுத்திய காவலர்கள் விசாரணை மேற்கொண்டதில் மத்திய அரசு வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினார். மேலும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களிக்க அனுமதிக்கும்படி கூச்சலிட்டார். சம்பவ இடம் வந்த தேர்தல் பறக்கும் படை தாசில்தார் மைலாவதி பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் வாக்களிக்க அவருக்கு அனுமதி அளித்தார். அரை நிர்வாணமாக வாக்களிக்க வந்த வங்கி நகை மதிப்பீட்டாளரால் வாக்குச்சாவடி மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.