கூடுதல் கட்டுப்பாட்டு கருவிகள் சிவகங்கை வருகை
சிவகங்கையில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த கூடுதலாக 100 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கான கட்டுப்பாட்டு கருவிகள் கொண்டு வரப்பட்டு அனைத்து கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
வரும் ஏப்ரல் 6 ம் தேதி தமிழகம் முழுவதுமுள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் ஏற்கனவே அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் எனப்படும் ஒப்புகை சீட்டு இயந்திரம் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதில் கூடுதல் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக இருந்த 100 கட்டுப்பாட்டு இயந்திரம் சிவகங்கை கொண்டு வரப்பட்டு ஆட்சியர் மதுசூதன் தலைமையில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்புடன் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.