விவசாய இடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்: ஆட்சியரிடம் மனு
அன்றாடம் கூலி வேலைக்கு சென்று வருவாய் ஈட்டி வருபவர்கள் இந்த மதுக்கடையில் வருவாயை இழந்து குடும்பத்தை தவிக்க விடுகின்றனர்
HIGHLIGHTS
விவசாய இடத்தில் இயங்கி வரும் அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப் பட்டினம் அருகே உள்ள விருதுவயல் என்ற குக்கிராமத்தில் உள்ள விளைநிலத்தில், அரசு டாஸ்மாக் கடை கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை எந்தவித முன் அறிவிப்புமின்றி, அப்பகுதி பொதுமக்களின் கருத்தைக் கேட்காமல் தொடங்க பட்டதாகவும். இந்த அரசு டாஸ்மாக் கடையிலிருந்து கண்ணாடி பாட்டில்கள் நெகிழிப் பைகள் மற்றும் மக்காத நெகிழிப் குவளைகள் விவசாய விளை நிலத்தில் கொட்டப்படுவதால் விளைநிலம் விவசாயத்திற்கு தகுதியற்ற நிலமாக மாறி வருகிறது .
மேலும், விருதுவயல், பரனூர், நெல்வேரி, பயமரியானேந்தல் உள்ளிட்ட ஐந்து கிராமங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை இருப்பதால் அந்த வழியாக செல்லும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மது குடிப்பவர்களின் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.
அன்றாடம் கூலி வேலைக்கு சென்று வருமானத்தை ஈட்டி வருபவர்கள் இந்த மதுக்கடையில் மது அருந்திவிட்டு வருவாயை இழந்து தவிக்கின்றனர். மதுக்குடிக்கும் கணவர்களை இழந்து தங்கள் கிராமங்களை சேர்ந்த பல பெண்கள் சிறு வயதிலேயே விதவைகளாகும் அவலம் ஏற்படுகிறது. இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விருதுவயல் உள்ளிட்ட 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை சந்தித்து டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.