ராஜா ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா கோலாகலமாக தொடங்கியது
Raja Rajagopala Thondaiman Centenary celebrations started
HIGHLIGHTS
புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா கோலாகலமாக வியாழக்கிழமை தொடங்கியது.
புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி வியாழக்கிழமை (23.06.2022) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மன்னரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி பங்கேற்று மன்னர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-ஆவது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் எளிமையையும், மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளையும் நினைவு கூறும் வகையில், புதுக்கோட்டை நகரில் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மன்னர் ராஜகோபால தொண்டைமான் தனது பதவிக் காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனிற்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தந்த பெருமைக்குரியவர். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மிகவும் பின்தங்கியிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை முன்னேற்றுகின்ற வகையில் 1974-ஆம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவித்தார்.
மேலும், முன்னாள் முதல்வர கருணாநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைத்திட ராஜா ராஜகோபால தொண்டைமான், தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொகைக்கு மகிழ்ச்சியுடன் அரசிற்கு வழங்கினார்.அன்னாருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாமன்னர் அவர்களின் திருவுருவச் சிலையினை 14.3.2000 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மன்னர் ராஜகோபால தொண்டைமான் மாளிகை என்றும் பெயர் சூட்டினார்.
மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்நன்னாளில், மன்னர் ராஜகோபால தொண்டைமான் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு புதுக்கோட்டை மாவட்ட பொது மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மன்னரின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் விரைவில் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வரப்படும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், முன்னாள் திருச்சி மாநகர மேயர் சாருபாலா தொண்டைமான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரா.சு. கவிதைப்பித்தன். புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் எம். லியாகத்அலி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமாறன்.
உதவிபொறியாளர் பாஸ்கர், விழாக்குழு செயலாளர் சம்பத்குமார், துணைத்தலைவர் ஏ. சந்திரசேகரன், துணைச்செயலர் த. ரவிச்சந்திரன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் மன்னர் வாரிசு ராஜகோபாலதாஸ் தொண்டைமான், சாருபாலா தொண்டைமான் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.