ஆர்.புதுப்பட்டி பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டிடங்கள்: அமைச்சர் திறப்பு
ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்தல் புதிய ரேசன் கடைகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், தலா ரூ.14.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில், 2 புதிய ரேசன் கடை கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புதிய ரேசன் கடைகளை திறந்து வைத்து, ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 30 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கிப் பேசினார்.
தொடர்ந்து, ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து அலுவலக கூட்ட அரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் டவுன் பஞ்சாயத்து பகுதியில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமேதிட்டம், தூய்மை இந்திய திட்டம், 15-வது நிதிக்குழு மானிய நிதி திட்டம், மூலதன மானியநிதி திட்டம் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி, எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி, உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் தற்போதைய நிலை, மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள், முடிக்கப்பட்ட பணிகள், பணி முன்னேற்றம் ஆகியவை குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விரிவாக கேட்டறிந்தார். திட்டப்பணிகளை விரைவில் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அவர் அதிகாரிகளை வலியுறுத்தனார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செல்வக்குமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு ரமேஷ், புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவர் சுமதி, துணைத் தலைவர் ஜெயக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் மதிவாணன், செயல் அலுவலர் கோபிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.