நாமக்கல்லில் குடிநீர் குழாய் அமைக்க தோண்டிய பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
நாமக்கல்லில் குடிநீர் குழாய் அமைக்க தோண்டிய பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் மருத்துவமனையில் அனுமதி.
HIGHLIGHTS
கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம், சோயா புண்ணாக்கு, தவிடு உள்ளிட்ட மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டு, நாமக்கல் ரயில் நிலையத்தில் இறக்கி லாரிகள் மூலம் கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தநிலையில், சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்ட புண்ணாக்கு ரயில் மூலம் நாமக்கல் வந்தது. நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து லாரிகளில் லோடு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஓரு லாரி அதிகாலை 2.30 மணியளவில், நாமக்கல்–சேலம் ரோட்டில் என்.ஜி.ஜி.ஓ காலனி வழியாக சிலுவம்பட்டிக்கு சென்றது.
சின்னமுதலைப்பட்டி பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் அந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியை ஓட்டி வந்த ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் ரகு (25) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தனியார் ஆஸ்பத்தரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். லாரி கவிழ்ந்ததை அடுத்து அப்பகுதியில் இருந்த பள்ளம் அவசர அவசரமாக மூடப்பட்டது.