வைரஸ் நோயில் இருந்து கால்நடைகளை காப்பாற்ற நாமக்கல் கலெக்டர் ஆலோசனை
Namakkal District News -வைரஸ் நோயில் இருந்து கால்நடைகளை காப்பாற்ற நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆலோசனை வழங்கி உள்ளார்.
HIGHLIGHTS
Namakkal District News -வைரஸ்நோயில் இருந்து கால்நடைகளை காப்பாற்றபால் உற்பத்தியாளர்களுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆலோசனை வழங்கி உள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தோல் கழலை நோய் என்பது, வைரஸ் நோயால் பசு மற்றும் எருமைகளுக்கு ஏற்படும் அம்மை வகையை சார்ந்த நோய் ஆகும். இந்நோய் தாக்கிய மாடுகளின் தோலின் மேல் கட்டிகள் தோன்றும், சில மாதங்களில் வடுக்கள் மறைந்து ரோமம் முளைத்துவிடும். மாடுகள் மற்றும் மாடுகள் கட்டப்பட்டுள்ள தொழுவங்களை சுத்தமாக பராமரித்தல், ஈ, கொசு மற்றும் ஒட்டுண்ணி பெருகாமல் தடுப்பதன் மூலம் இந்நோய் பரவுதலை தடுக்க முடியும்.
கொசு, ஈ, உண்ணி கடி மற்றும் பாதிக்கப்பட்ட மாடு மூலமாக இந்த நோய் பரவுகிறது. கோடைக்கால தொடக்கத்தில் இந்த நோய் அதிக அளவு பரவுகிறது. கறவையாளர்கள் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட மாட்டின் தோல் மற்றும் காயங்களில் 18 முதல் 35 நாட்கள் வரை வாழும். இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு, கண்ணில் நீர் வடிதல் மற்றும் மூக்கில் சளி ஒழுகுதல் போன்றவை ஆரம்ப அறிகுறிகளாகும். கடுமையான காய்ச்சல் இருக்கும். உடல் ழுமுவதும் கட்டிகள் கட்டு கட்டாக வீக்கம் காணப்படும். உருண்டையாக உள்ள கட்டிகள் உடைந்து அதன் மத்தியிலிருந்து சீழ் வெளியேறும். இந்த கட்டியின் அகலம் 0.5-5 செ.மீ வரை இருக்கும். நிணநீர் சுரப்பிகள் வீங்கி பெரியதாக காணப்படும். கால்களில் வீக்கம் இருக்கும் அதனால் மாடுகள் சோர்வாக காணப்படும். இந்நோய் தொற்று உள்ள பகுதிகளில் 60 சதவீத மாடுகள் பாதிக்க வாய்ப்புள்ளது. பால் உற்பத்தி குறைந்து காணப்படும். மேலும் சினை பிடிப்பதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
தீவனம் சரியாக உட்கொள்ளாததால் உடல் எடை குறைந்து காணப்படும். காயங்களால் மாட்டின் தோல் முற்றிலும் பாதிப்படையும். இளம் சினை மாடுகளில் நோய் எதிர்ப்ப சக்தி குறைவாக இருப்பின் கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. கால்நடைகளில் அதிக அளவில் நோய் தொற்று ஏற்பட்டாலும் இறப்பு சதவிகிதம் மிகவும் குறைவாகவே இருக்கும்.
இந்த நோய்க்கு தற்சமயம் தடுப்பூசி கிடையாது. அதனால் வரும் முன் காப்பதே நல்லது. உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கும், காயங்களுக்கும் தகுந்த சிகிச்சை அளித்தலும், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்குவதன் மூலமும் மாட்டின் உற்பத்தி திறனை தக்க வைக்கலாம். நோய் அறிகுறி தென்பட்ட உடனே அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகி நோய்க்கான உரிய சிகிச்சை முறைகளை அறிந்து மருந்துகள் வழங்குவது சிறந்தது. பாதிக்கப்பட்ட மாடுகளை பண்ணையில் இருந்து தனிமைப்படுத்தி பராமரிக்க வேண்டும். சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பாதித்த மாடுகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் பாத்திரம் தனியாக இருக்க வேண்டும். கறவையாளர்கள் பாதிக்கப்பட்ட மாடுகளை தொட நேர்ந்தால் உடனடியாக கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பிறகே மற்ற ஆரோக்கயமான மாடுகளை தொட வேண்டும்.
இந்த நோய் பாதிப்பு மற்றும் நோய் பரவாமல் தடுக்க, பண்ணை அளவில் அனைத்து உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். சுத்தமான கொட்டகை, சுத்தமான கறவையாளர், சுத்தமான கால்நடைகள் ஆகியவை மட்டுமே இந்த நோய் தொற்றில் இருந்து நம் கறவை மாடுகளை காப்பாற்றும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2