முழு லாக்டவுன் இல்லாமல் கட்டுப்படுத்த வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா
மீண்டும் ஒரு முழு லாக்டவுனை சந்திப்பதற்கு வியாபாரிகள் இடத்தில் சக்தி இல்லை. அதனால், லாக்டவுன் இல்லாத கட்டுப்பாடுகளை நெறிப்படுத்த வேண்டும்.
HIGHLIGHTS
நாமக்கல்லில் தமிழக பொருட்களை வாடகைக்கு விடுவோர் சங்க ஐம்பெரும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா விழாவை துவக்கி வைத்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
கொரோனா 3வது அலை மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்காக தமிழக அரசு சில கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. தற்போது, ஐயப்பன் கோயில் சீசன் நேரமாக உள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிறு வணிகள் வணிகர்கள் இதுபோன்ற நேரங்களை நம்பி உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கடந்த கொரோனா பேரிடர் காலத்தில் இருந்து மீண்டு வரமுடியாத நிலையில் உள்ளது. 40 சதவீதம் வணிகர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மீண்டும் ஒரு முழு லாக்டவுனை சந்திப்பதற்கு வியாபாரிகள் இடத்தில் சக்தி இல்லை. அதனால், லாக்டவுன் இல்லாத கட்டுப்பாடுகளை நெறிப்படுத்த வேண்டும். வியாபாரிகளும், அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை மனதில் கொண்டு அரசு விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து தொற்று பரவாமல் தடுக்க வேண்டும். இரண்டு தடுப்பூசிகள் போடாத யாராக இருந்தாலும் வியாபார நிறுவனங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது.
அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிப்பதற்கு வியாபாரிகள் தயாராக இருக்கிறோம். மிக மிக அவசியம் ஏற்பட்டால் மட்டும்மே முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும். ஜவுளி, காலணிக்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய நிதி அமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். இந்த நாட்டுக்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் வணிகர்கள் எனவே அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கு அரசுகள் உதவ வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு, தமிழக முதல்வர் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். சம்பளம் இல்லாமல் பணியாற்றி அரசுக்கு வரி செலுத்துபவர்கள் வியாபாரிகள். வணிகர்களின் வாழ்வாதாரம் நிலைகுலைந்து போகாமல் இருக்க நல்ல முடிவை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசு உடனடியாக வணிகர்களையும், அரசுத்துறை அதிகாரிகளையும் இணைத்து ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்யும் இடத்திலேயே அரசு தடை செய்ய வேண்டும். பிளாஸ்டிக்குக்கு மாற்றுப்பொருள் என்ன என்பதை அரசு ஆராய்ந்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.