ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக ரூ.13.99 லட்சம் மோசடி: போலீசார் வழக்கு
ராசிபுரத்தை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரிடம் பகுதி நேர வேலை தருவதாக கூறி ரூ. 13.99 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
HIGHLIGHTS
ராசிபுரத்தை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரிடம் பகுதி நேர வேலை தருவதாக கூறி ரூ. 13.99 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் வரதராஜ், இவரது மகன் அசோக்குமார் (27), சாஃப்ட்வேர் இன்ஜினியரான அவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கொரோனா காலத்திற்கு பின், வீட்டில் இருந்தே அவர் பணி செய்து வருகிறார்.
இந்தநிலையில், மீதமுள்ள நேரத்தில், பகுதி நேரமாக ஏதாவது ஒரு வேலை செய்யலாம் என்ற நோக்கில், இண்டர்நெட்டில் ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலையை தேடி உள்ளார். அப்போது அவரை வாட்ஸ்-ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், அவருக்கு பகுதி நேர வேலை தருவதாக கூறி பல்வேறு டாஸ்க்குகளை கொடுத்துள்ளனர்.
ஒவ்வொரு டாஸ்குக்கும், குறிப்பிட்ட பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தி டாஸ்க் செய்து முடித்தா, உங்களுக்கு கமிஷனுடன் சேர்த்து கூடுதலாக பணம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதை உண்மை என நம்பிய அசோக்குமார், பல்வேறு கட்டங்களாக, ஒவ்வொரு டாஸ்க்காக செய்து முடித்துள்ளார். இவ்வாறு மொத்தம் ரூ. 13.99 லட்சம் செலுத்தி உள்ளார். அப்போது தனக்கு வரவேண்டிய கமிஷன் தொகையை அவர் கேட்டுள்ளார். அதைத்தொடர்ந்து மர்ம நபர்கள், அவருடன் இருந்த தொடர்பை துண்டித்து விட்டனர். செல்போன் நம்பரையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டனர்.
இதனால், தான் ஏமாற்றப்பட்டுள்ளது அறிந்துஅசோக்குமார் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, அவர் நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில், புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பவு செய்து ரூ. 13.99 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.